டி.டி.வி. தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய வேண்டும் அமைச்சர் அழைப்பு

டி.டி.வி. தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2018-10-25 23:15 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஓரடியம் புலத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார். இதனால் 18 தொகுதிகள் காலியாகி விட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களையும் மக்கள் பணி ஆற்ற விடாமல் தினகரன் கெடுத்து இருக்கிறார். இது அவர் செய்த மிகப்பெரிய துரோகம் ஆகும்.

அவரை நம்பி உள்ளவர்கள் இனிமேலும் அவரிடம் இருந்து அவதிப்படக் கூடாது. அம்மாவின் ஆட்சி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் இயங்குகிறது.

அ.தி.மு.க. கட்சி, அலுவலகம், இரட்டை இலை சின்னம் ஆகியவை எங்கள் பக்கம் உள்ளது. தாய் கழகம் இதுதான். எனவே மனக்கசப்பால் பிரிந்து சென்ற சகோதரர்கள் அனைவரும் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்க வேண்டும். தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் பணியாற்ற வேண்டும்.

மக்களுக்காக பணியாற்றுகிற ஒரே கட்சி அ.தி.மு.க. தான். எனவே டி.டி.வி. தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்