அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர் மாவட்டத்திலுள்ள ஊரகம், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் விருப்பமுள்ளவர்கள் அம்மா இரு சக்கர வாகனம் பெற வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2018-10-26 22:30 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டிற்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆயிரத்து 88 மொத்த இலக்கீடு நியமிக்கப்பட்டதில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத ஒதுக்கீட்டில் மொத்தம் 44 பயனாளிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டதில், தற்போது வரை 6 நபர்களுக்கு மட்டுமே இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனத்திற்கான மானிய தொகையில், ரூ.25 ஆயிரம் ஒதுக்கீட்டில் கூடுதலாக 25 சதவீதம் தொகை அதாவது அதிக பட்சமாக ரூ.31 ஆயிரத்து 250 வரை மானியம் பெற்றுக்கொள்ளலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதனடிப்படையில் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஊரகம், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் விருப்பமுள்ளவர்கள் அம்மா இரு சக்கர வாகனம் பெற வருகிற 31-ந்தேதிக்குள் திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அரியலூர் என்ற முகவரிக்கு விண்ணப்பித்து கூடுதல் மானியத்தொகை வசதியினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும், ஏற்கனவே அம்மா இரு சக்கர வாகனம் வாங்கி ரூ.25 ஆயிரம் மானியத்தொகை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் கூடுதலாக வரப்பெற்றுள்ள மானியத்தொகை வசதியினை பயன்படுத்தி கொள்ளவும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்