தியாகதுருகம் அருகே: இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை- சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்

தியாகதுருகம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதால் போலீசில் அவருடைய தந்தை புகார் கொடுத்துள்ளார்.

Update: 2018-10-26 22:00 GMT
கள்ளக்குறிச்சி, 

சின்னசேலம் அருகே உள்ள கருந்தளாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி மகள் வித்யா(வயது 23). இவருக்கும் தியாகதுருகம் அருகே உள்ள விருகாவூரை சேர்ந்த கோவிந்தராசு என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் வித்யா, வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த வித்யாவின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். பின்னர் வித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சின்னசாமி வரஞ்சரம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்