பட்டுக்கோட்டை வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் பரமக்குடி கோர்ட்டில் சரண்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் பரமக்குடி கோர்ட்டில் சரணடைந்தார்.

Update: 2018-10-27 22:30 GMT

பரமக்குடி,

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தாந்தாங்காடு வெட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த ரவுடி தம்பா கார்த்திக் (வயது 26) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பட்டுக்கோட்டை நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நரியம்பாளையம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் பிரகாஷ் (26) உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வந்த பிரகாஷ் உள்பட 7 பேரும் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தினமும் காலை கையெழுத்திட்டு வந்த நிலையில் கடந்த 24–ந்தேதி பிரகாஷ் தஞ்சாவூர் மெயின்ரோடு ஆலடிக்குமுளை பகுதியில் வந்தபோது 10–க்கும் மேற்பட்டோர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்ததுடன் அவரது தலையை துண்டித்து தஞ்சாவூர் மெயின் ரோட்டில் வைத்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இந்த நிலையில் இக்கொலை சம்பவம் தொடர்பாக பட்டுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அருண் மன்னார்(28), இட்லி பிரசாத் (23), செம்பு மணி (24) உள்பட 9 பேர் பரமக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக பட்டுக்கோட்டையை சேர்ந்த கலைமணி என்பவரது மகன் கபிலன்(23) பரமக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரையும் 29–ந்தேதி(நாளை) வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்