கள்ளக்காதல் தகராறில் பெண் அடித்துக்கொலை - தப்பிஓடிய கணவருக்கு வலைவீச்சு

போளூரில் கள்ளக்காதல் தகராறில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். தப்பிஓடிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-10-28 22:20 GMT
போளூர்,

கலசபாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் காரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகள் பூஜா என்கிற தரணி (வயது 21). இவருக்கும், போளூர் பொத்தரையை சேர்ந்த தொழிலாளி பச்சையப்பன் (25) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் பச்சையப்பனுக்கும், அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுகுறித்து தரணிக்கு தெரியவந்தது. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்போது பச்சையப்பன், தரணியை சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தரணி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து தரணியின் தாய் கலா கொடுத்த புகாரின் பேரில் போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய பச்சையப்பனை தேடி வருகிறார்.

அடித்துக்கொலை செய்யப்பட்ட தரணிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆரணி உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்