மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 3 வாலிபர்கள் பலி ஒருவர் படுகாயம்

திருத்தணி அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-10-29 22:30 GMT
பூந்தமல்லி ,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள முரக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கதிரேசன்(வயது 24), அஜித்(18). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு திருத்தணியில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பின்னர் இருவரும் மோட்டார்சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். திருத்தணி-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் முரக்கம்பட்டு அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிளும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இதில் கதிரேசன், அஜித் மற்றும் எதிரே வந்து மோதிய மோட்டார் சைக்கிளில் வந்த பொதட்டூர்பேட்டை அருகில் உள்ள பாண்டிரவேடுவை சேர்ந்த பாஸ்கரன்(22) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும் இந்த விபத்தில் பாஸ்கருடன் மோட்டார் சைக்கிளில் வந்த அவரது நண்பரான அரிகிருஷ்ணன் (22) என்பவர் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள், அரிகிருஷ்ணனை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார், பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்