விருத்தாசலம் அருகே: ஓடும் பஸ்சில் தம்பதியிடம் 24 பவுன் நகைகள் அபேஸ் - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விருத்தாசலம் அருகே ஓடும் பஸ்சில் சங்கராபுரம் தம்பதியிடம் 24 பவுன் நகைகளை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-10-29 21:45 GMT
விருத்தாசலம், 

விழுப்புரம் மாவட்டம் சங்காராபுரம் அருகே உள்ள பெரியகொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் தன்ராஜ்(வயது 39). இவருடைய மனைவி சிவசங்கரி(26). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் கைக்குழந்தையுடன் உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் நோக்கி புறப்பட்ட தனியார் பஸ்சில் ஏறினர்.

மங்கலம்பேட்டை என்ற இடத்தில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது, சிவசங்கரி வைத்திருந்த பையை பார்த்தபோது, 24 பவுன் நகைகளை காணவில்லை. இதனால் கணவன்-மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து சிவசங்கரி மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், 24 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்திருந்தேன். பயணிகள் கூட்டமாக இருந்தது. அந்த சமயத்தில் மர்மநபர்கள், பையில் இருந்த நகைகளை அபேஸ் செய்து விட்டனர். இது தொடர்பாக விசாரித்து, மர்மநபர்களை கண்டுபிடித்து நகைகளை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்