முத்துப்பேட்டை பகுதியில் மோட்டார்சைக்கிள்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

முத்துப்பேட்டை பகுதியில் மோட்டார்சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-10-30 21:30 GMT
முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது60). இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. அதேபோல முத்துப்பேட்டை தர்மர் கோவிலை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (50).

இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. இந்த மோட்டார்சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

இதுகுறித்து ரவீந்திரன், சுப்பிர மணியன் ஆகியோர் முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிள்களை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். முத்துப்பேட்டை பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற மோட்டார்சைக்கிள் திருட்டு சம்பவங்கள் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. மோட்டார்சைக்கிள் திருடர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்