தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.183 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.183 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

Update: 2018-10-30 23:30 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் லளிகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் சிவனருள், மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், கூட்டுறவு துணை பதிவாளர் ரவிச்சந்திரன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லளிகம் கூட்டுறவு சங்க தலைவர் அங்குராஜ் வரவேற்று பேசினார். விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 133 விவசாயிகளுக்கு ரூ.45 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு பயிர்க்கடன்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:- தர்மபுரி மாவட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் ரூ.124 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை தாண்டி 33 ஆயிரத்து 165 விவசாயிகளுக்கு ரூ.160 கோடியே 8 லட்சம் பயிர்க்கடன் வழங்கி சாதனை படைக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப் படுகிறது. தற்போது 2018-2019-ம் நிதி ஆண்டில் தமிழகத்தில் ரூ.8 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் ரூ.183 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்படி கடந்த செப்டம்பர் மாதம் வரை 15 ஆயிரத்து 226 விவசாயிகளுக்கு ரூ.84 கோடியே 27 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுவணிக கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 2018-2019-ம் நிதி ஆண்டில் ரூ.4 கோடியே 7 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கை தாண்டி இதுவரை 1837 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 14 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார். இந்த விழாவில் கூட்டுறவு சங்க தலைவர்கள் பொன்னுவேல், கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், பெரியண்ணன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூக்கடைரவி மற்றும் அதிகாரிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சங்க செயலாளர் செல்வமணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்