தஞ்சை மாவட்டத்தில் கிராம உதவியாளர்கள் வேலை நிறுத்தம் - ரூ.3,500 போனஸ் வழங்க வலியுறுத்தல்

ரூ.3,500 போனஸ் வழங்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் கிராம உதவியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2018-10-31 22:15 GMT
தஞ்சாவூர்,

வருவாய்த்துறை அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக அடிப்படை ஊதியமாக ரூ.15,700 வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் போன்று கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதத்தை கணக்கீடு செய்து வழங்க வேண்டும். போனசாக ரூ.3,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கிராம உதவியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 429 பேர் ஈடுபட்டனர். இவர்களில் நிர்வாகிகள் பலர் தஞ்சை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க வட்ட தலைவர் முரளி தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் குமார், பழனிசாமி, சேவகமூர்த்தி, சுரேஷ், புனிதவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் சங்கர்கணேஷ், கோதண்டபாணி, சிவ.ரவிச்சந்திரன், வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் தமிழ்வாணன், அருள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

மேலும் செய்திகள்