சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் இன்று விடுதலை இலங்கை அரசு முடிவு

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை இன்று விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2018-10-31 22:59 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேர், மண்டபம் மீனவர்கள் 4 பேர், ஜெகதாபட்டினம், புதுக்கோட்டை மீனவர்கள் 17 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் பிடித்துசென்றனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு நீர்க்கொழும்பு சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவ சங்கங்கள் மத்திய, மாநில அரசிடம் வலியுறுத்தின.

இதையடுத்து மத்திய அரசு,இலங்கை அரசிடம் மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தியதாக தெரியவருகிறது. இதைதொடர்ந்து நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு தமிழக மீனவர்களை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளது. இவர்கள் இன்று (வியாழக்கிழமை) இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட உள்ளனர். இந்த தகவலை நிரபராதி மீனவர்கள் விடுதலை கூட்டமைப்பு தலைவர் யு.அருளானந்தம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்