இலங்கை சிறையில் இருந்து 28 மீனவர்கள் விடுவிப்பு - ஓரிரு நாளில் தமிழகம் திரும்புகிறார்கள்

இலங்கை சிறையில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 28 மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஓரிரு நாளில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2018-11-01 21:30 GMT
ராமேசுவரம்,

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்களுடைய குடும்பத்தினரும், மீனவர் சங்கத்தினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதனைத் தொடர்ந்து மாநில அரசு கோரிக்கையின் பேரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என இலங்கை அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் இருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 7 பேர், மண்டபத்தை சேர்ந்த 4 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 11 பேர், நாகபட்டினத்தை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 28 மீனவர்கள் நேற்று இலங்கையில் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜுட்சன், அந்த 28 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் வருகிற 23-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும், அவ்வாறு ஆஜராகவில்லை எனில் அந்த படகுகள் இலங்கை அரசுடைமையாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து விடுவிக்கப்பட்ட 28 மீனவர்களும் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மெரிகானா முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் இன்னும் ஓரிரு நாளில் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர தூத்துக்குடியை சேர்ந்த 8 பேர், ராமேசுவரத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 10 மீனவர்கள் நீர்கொழும்பு சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிப்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

சிறையில் உள்ள ராமேசுவரத்தை சேர்ந்த 2 பேரிடம் மீனவர் அடையாள அட்டை இல்லாததால் அவர்களை விடுவிப்பதில் சிக்கல் நீடிப்பதாக தகவல்கள் தெரியவந்தன.

மேலும் செய்திகள்