விநாயகர் சதுர்த்தி கொண்டாடியவர்கள் மீதான வழக்கு ரத்து-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

விநாயகர் சதுர்த்தி கொண்டாடியவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ராமராஜ் உள்பட 8 பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

Update: 2018-11-02 21:45 GMT
ராஜபாளையம், 


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தாராபுரம் மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை விநாயகர் சதுர்த்தி வழிபாடு விழா நடத்த போலீசாரின் அனுமதி கேட்டு விண்ணப்பித்தோம். அனுமதி கிடைக்காதபட்சத்தில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சில வழிகாட்டுதல்களுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இதற்கிடையே கடந்த செப்டம்பர் மாதம் அனுமதியின்றி 12 அடி உயரமுள்ள விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், எங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எங்கள் மீது உள்ள முன்விரோதம் காரணமாக, ராஜபாளையம் டவுன் கிராம நிர்வாக அதிகாரி போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆனால் நாங்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கோர்ட்டு மூலம் அனுமதி பெற்றுள்ளோம். அப்படி இருக்கும்பட்சத்தில் எங்கள் மீது வழக்குபதிவு செய்தது சட்டவிரோதம். எனவே எங்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரர்கள் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்