அன்னவாசல் அருகே கார் மோதி பெண் பலி; 2 பேர் படுகாயம் டிரைவருக்கு வலைவீச்சு

அன்னவாசல் அருகே கார் மோதி பெண் பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-11-03 23:00 GMT
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது59). அதே பகுதியை சேர்ந்தவர்கள் வாசுகி (32), பழனிச்சாமி மனைவி மாரிக்கண்ணு (35) ஆகிய 3 பேரும் அண்ணா பண்ணை பகுதியில் வேலைக்கு சென்றனர். பின்னர் வேலையை முடித்து விட்டு, ஊருக்கு சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அண்ணாபண்ணை அருகே 3 பேரும் வந்து கொண்டிருந்தபோது, புதுக்கோட்டையில் இருந்து குடுமியான்மலையை நோக்கி சென்ற கார் ஒன்று சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்த பாண்டியம்மாள், வாசுகி, மாரிக்கண்ணு ஆகிய 3 பேர் மீது பயங்கரமாக மோதி விட்டு, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே பாண்டியம்மாள் பரிதாபமாக இறந்தார். வாசுகி, மாரிக்கண்ணு ஆகிய 2 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயமடைந்த வாசுகி, மாரிக்கண்ணுவை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பாண்டியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்