விமானங்கள் தாமதம்; பயணிகள் அவதி

திருச்சிக்கு விமானங்கள் தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2018-11-03 22:30 GMT
செம்பட்டு,

சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்சி வர வேண்டிய தனியார் விமானம் 2 மணி நேரம் தாமதமாக நேற்று அதிகாலை 2.30 மணிக்கு வந்தது. பின்னர் அதிகாலை 3.30 மணிக்கு மீண்டும் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது. சார்ஜாவில் இருந்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திருச்சி வர வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக 5.30 மணிக்கு வந்தது. பின்னர் காலை 6.50 மணிக்கு சார்ஜா புறப்பட்டு சென்றது.

சென்னையில் இருந்து நேற்று காலை 6.25 மணிக்கு திருச்சி வரவேண்டிய தனியார் விமான சேவை திடீரென ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்று காலை 11 மணிக்கு வரவேண்டிய விமானம் 2 மணி நேரம் தாமதமாக மதியம் 1 மணிக்கு வந்தது. பின்னர் மதியம் 2.10 மணிக்கு சென்னை புறப்பட்டு சென்றது.

இதேபோல் சென்னையில் இருந்து நேற்று மாலை 4 மணிக்கு வரவேண்டிய தனியார் விமானம் ஒரு மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக மாலை 5.15 மணிக்கு வந்தது. பின்னர் மாலை 5.45 மணிக்கு சென்னை புறப்பட்டு சென்றது. கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று இரவு 10 மணிக்கு வரவேண்டிய தனியார் விமானம் 45 நிமிடம் தாமதமாக இரவு 10.45 மணி அளவில் வந்தது. விமானங்கள் தாமதம் மற்றும் ரத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானங்கள் தாமதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்