லாரியில் ரூ.7 லட்சம் மதுபாட்டில்கள் கடத்தல்: போலீஸ் தேடிய 2 பேர் கைது

கோட்டூர் அருகே லாரியில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கடத்தி வந்த வழக்கில் போலீஸ் தேடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2018-11-04 22:15 GMT
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே விக்கிரபாண்டியம் போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரியமங்கலம் என்ற இடத்தில் லாரியில் இருந்து 2 மினி வேன்களில் மதுபாட்டில்களை சிலர் மாற்றி கொண்டு இருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் வாகனங்களை சோதனை செய்தபோது அதில் 7,240 மதுபாட்டில்கள் இருந்தன. அதன் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் என கூறப்படுகிறது. தொடர்ந்து விக்கிரபாண்டியம் போலீசார் லாரி மற்றும் 2 மினிவேன்கள், 7,240 மதுபாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து விக்கிரபாண்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை கடத்தி வந்தவர்களை தேடிவந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் நாமக்கலில் பதுங்கி இருப்பதாக விக்கிரபாண்டியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கர்நாடக மாநிலம் பெங்களூரு சஞ்சீவ் நகரை சேர்ந்த மோகன்(வயது51), லாரி டிரைவர் நாகை மாவட்டம், தெற்கு பொய்கைநல்லூரை சேர்ந்த ராஜா(25) என்பதும், காரைக்காலில் இருந்து காரியமங்கலத்திற்கு லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. மோகன், ராஜா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்