நடிகர் ஷாருக்கானை சந்திக்க முடியாததால் விரக்தி : பிளேடால் உடலை கீறிய ரசிகரால் பரபரப்பு

நடிகர் ஷாருக்கானை சந்திக்க முடியாததால் விரக்கியில் அவரது வீட்டு முன்பு பிளேடால் உடலை கீறிய ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-04 23:18 GMT
மும்பை,

மும்பை பாந்திராவில் நடிகர் ஷாருக்கானின் மன்னத் பங்களா வீடு உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு கூடி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சிலர் தாங்கள் கொண்டு வந்து இருந்த பரிசு பொருட்களை, வீட்டு மாடத்தில் நின்று கையசைத்து கொண்டிருந்த நடிகர் ஷாருக்கானை நோக்கி வீசினர்.

இதைத்தொடர்ந்து ரசிகர்களில் சிலர் ஷாருக்கானை பார்க்கும் ஆர்வத்தில் முண்டியடித்து கொண்டு சென்றனர். போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் ரசிகர் ஒருவர் நடிகர் ஷாருக்கானின் பங்களா வீட்டு முன் வந்தார். திடீரென அவர் தனது உடலை பிளேடால் கீறி காயப்படுத்தி கொண்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஓடிச் சென்று அவரை மீட்டு கிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணையில், அவரது பெயர் முகமது சலீம் என்பது தெரியவந்தது. நடிகர் ஷாருக்கானை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க கொல்கத்தாவில் இருந்து வந்ததாக கூறிய அவர் வீட்டுக்குள் செல்ல காவலாளி அனுமதிக்க மறுத்ததால், விரக்தியில் உடலை பிளேடால் கீறி கொண்டதாக கூறினார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்