தூத்துக்குடி அருகே பரிதாபம்: பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலி

தூத்துக்குடி அருகே பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-11-05 23:00 GMT
ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சந்திரசிகாமணி. விவசாயி. இவருடைய மனைவி எப்சிபாய் (வயது 54). இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்கு பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை.

நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தபோது, திடீரென எப்சிபாய் இறந்தார். உடனடியாக அவரது உடல் பிரேத பரிசோதனை அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, நேற்று காலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, எப்சிபாய் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்து உள்ளது. இதைத்தொடர்ந்து சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றனர்.

அதன்படி, அத்திமரப்பட்டி பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று சுகாதார பணிகளை தீவிரப்படுத்தினர். மேலும் நோய் பரவாமல் இருக்க எப்சிபாயின் குடும்பத்தினருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்