கலசபாக்கம் அருகே மர்ம காய்ச்சலுக்கு பெட்டிக்கடைக்காரர் பலி

கலசபாக்கம் அருகே மர்ம காய்ச்சலுக்கு பெட்டிக்கடைக்காரர் பலியானார்.

Update: 2018-11-05 23:30 GMT
கலசபாக்கம்,

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகில் உள்ள நார்த்தாம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சுரேஷ் (வயது 30). இவர் அந்த பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பராசக்தி. இவர்களுக்கு 5 மாதத்தில் கோபிநாத் என்ற மகன் உள்ளான்.

சுரேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகாததால் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கும் உடல்நிலை அதே நிலையில் இருந்ததால் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நிலை மோசமானதையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்து விட்டார்.

சுரேஷ் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால் மருத்துவமனையில் இருந்து அறிக்கை ஏதும் வழங்கப்படவில்லை.

தற்போது மழை காலம் தொடங்கி உள்ளதால் அந்த பகுதியில் இன்னும் சிலருக்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அந்த பகுதியில் சுகாதார துறையினர் முகாம் அமைத்து நோய் தொற்று ஏற்படும் முன்பு சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்