திருச்செங்கோடு அருகே வாலிபர் கத்தியால் குத்திக்கொலை

திருச்செங்கோடு அருகே வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2018-11-07 22:45 GMT
திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள பருத்திபள்ளியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகன் பெருமாள்(வயது 30), லாரி பட்டறை உரிமையாளர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை அன்று இரவு, தந்தை, மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தங்கவேலுக்கு, ஆதரவாக அதே ஊரை சேர்ந்த வீரமணி, லாரி டிரைவர் மனோகரன் ஆகியோர் பேசினர். பெருமாளுக்கு ஆதரவாக பக்கத்து வீட்டை சேர்ந்த கலையரசன்(25) பேசினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது.

இதில் ஆத்திரம் அடைந்த மனோகரனும், வீரமணியும் சேர்ந்து கலையரசனை கத்தியால் குத்தினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், கலையரசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். கலையரசனின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இந்த கொலை குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் மனோகரன், வீரமணி ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தந்தை-மகன் இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்