மனைவியை மிரட்டுவதற்காக மண்எண்ணெய் ஊற்றியவர்: பட்டாசு வெடித்தபோது தீப்பொறி பட்டு விவசாயி உடல் கருகி சாவு - புதுப்பேட்டை அருகே பரிதாபம்

புதுப்பேட்டை அருகே மனைவியை மிரட்டுவதற்காக மண்எண்ணெய் ஊற்றிய விவசாயி, பட்டாசு வெடித்த போது தீப்பொறி பட்டு உடல் கருகி பலியானார்.

Update: 2018-11-07 21:30 GMT
புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே உள்ள ரெட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 28). விவசாயி. இவரது மனைவி ஜான்சி(24). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று கண்ணதாசனுக்கும் ஜான்சிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கண்ணதாசன் கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

பின்னர் அன்று இரவு வீட்டுக்கு திரும்பி வந்த கண்ணதாசன், ஜான்சியை மிரட்டுவதற்காக தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றினார். இதை தொடர்ந்து அவர் தீபாவளி பண்டிகைக்காக வாங்கி வைத்திருந்த பட்டாசுகளை எடுத்து, வீட்டின் முன்பு வைத்து கொளுத்தினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கண்ணதாசன் மீது தீப்பொறி விழுந்தது. இதில் திடீரென அவரது உடலில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கண்ணதாசன் மீது எரிந்த தீயை அணைத்து, அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கண்ணதாசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஜான்சி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்