சின்னவீராம்பட்டினம் கடல் அலையில் சிக்கிய மாணவர் உடல் கரை ஒதுங்கியது மற்றொருவரின் கதி என்ன?

சின்னவீராம்பட்டினம் கடல் அலையில் சிக்கி பலியான மாணவரின் உடல் கரை ஒதுங்கியது. மற்றொருவரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

Update: 2018-11-08 22:30 GMT
அரியாங்குப்பம்,

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் யக்யா காஷாப் (20), ஸ்ரீயேஷ் திரிவேதி (20). பெங்களூருவில் உள்ள கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பி.காம். படித்து வந்தனர். நண்பர்கள் 3 பேருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுவைக்கு சுற்றுலா வந்தனர்.

இங்கு பல்வேறு சுற்றுலா இடங்களை பார்வையிட்ட அவர்கள் நேற்று முன்தினம் அரியாங்குப்பத்தை அடுத்த சின்னவீராம்பட்டினம் கடலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். நேற்று முன்தினம் அமாவாசையையொட்டி வழக்கத்துக்கு மாறாக கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் அங்கு குளித்த ஸ்ரீயேஷ் திரிவேதி, யக்யா காஷாப் இருவரும் உற்சாக மிகுதியில் கடலின் ஆழமான பகுதிக்கு சென்றனர். அப்போது திடீரென்று எழுந்த ராட்சத அலையில் சிக்கிய அவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதைப் பார்த்த சக நண்பர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டனர். உடனே அங்கிருந்த மீனவர்கள் கடலில் குதித்து தேடிப்பார்த்தனர். அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீசார் விரைந்து வந்து, மீனவர்கள் உதவியுடன் படகில் கடலுக்குள் சென்று தேடினர். ஆனால் அவர்களை மீட்க முடியவில்லை. தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் ஸ்ரீயேஷ் திரிவேதியின் உடல் நல்லவாடு பகுதியில் நேற்று காரை கரை ஒதுங்கியது. இதை அறிந்த அரியாங்குப்பம் போலீசார் அங்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். யக்யா காஷாபின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்