உத்தமபாளையம் அருகே: மோட்டார்சைக்கிள் மீது மினிவேன் மோதி 2 வாலிபர்கள் பலி - டிரைவர் கைது

உத்தமபாளையம் அருகே மோட்டார்சைக்கிள் மீது மினிவேன் மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-11-08 22:30 GMT
உத்தமபாளையம்,

உத்தமபாளையம் அடுத்துள்ள க.புதுப்பட்டி முஸ்லிம் தெருவை சேர்ந்த சிக்கந்தர் மகன் காதர்மைதீன்(வயது 29). திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இதே பகுதியை சேர்ந்தவர் சுருளிமஸ்தான்(35). இதே ஊரை சேர்ந்த சுருளிவேல் மகன் சூர்யா (25). இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

நேற்று முன்தினம் இரவு க.புதுப்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவுக்கு நண்பர்களை அழைத்து சூர்யா உபசரித்துள்ளார். இதையடுத்து நண்பர்கள் 3 பேரும் ஒரு மோட்டார்சைக்கிளில் உத்தமபாளையம் நோக்கி சென்றனர். மோட்டார்சைக்கிளை காதர்மைதீன் ஓட்டினார். காக்கில்சிக்கையன்பட்டி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த மினிவேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் காதர்மைதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மற்ற இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் இதிரீஸ்கான் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த காதர்மைதீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுருளிமஸ்தான் பரிதாபமாக இறந்து போனார்.

இதையடுத்து சூர்யா உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிவேன் டிரைவர் கூடலூரை சேர்ந்த தங்ககாமன் (29) என்பவரை கைது செய்தனர். விபத்தில் நண்பர்கள் இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்