பெரும்பாக்கத்தில் வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது

பெரும்பாக்கத்தில் வாலிபரை கொலை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-11-08 19:37 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் நூக்கம்பாளையம் எழில்நகரில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் சந்தீப்குமார் (வயது 20). இவர், வீடு வீடாக சென்று தண்ணீர் கேன்கள் வினியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார்.தீபாவளி அன்று இரவு அந்த பகுதியில் பட்டாசு வெடித்த உடல் பருமனான ஒரு சிறுவனை இவர் கிண்டல் செய்தார். இதை அங்கிருந்த ராகுல் (23) என்பவர் தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ராகுலை சந்தீப்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராகுல், தனது நண்பர்களுடன் சேர்ந்து சந்தீப்குமாரை வெட்டிக்கொலை செய்தார்.

இதுபற்றி பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பெரும்பாக்கம் நூக்கம்பாளையத்தை சேர்ந்த சிவகுமார் (45), அவருடைய மகன் பிரபு (20) மற்றும் கோகுல் (20), அவருடைய தம்பி ராகுல் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கைதான ராகுல் என்பவரை தாக்கியதாக அதே பகுதியை சேர்ந்த அஜித் (21) மற்றும் 3 சிறுவர்கள் என மேலும் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்