தொட்டியம் அருகே பன்றிக்காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலி

தொட்டியம் அருகே பன்றிக்காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலியானது.

Update: 2018-11-08 22:45 GMT
தொட்டியம்,

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள நாகையநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பெரியநாச்சிபட்டியை சேர்ந்தவர் தமிழழகன் என்ற தினேஷ்(வயது34) விவசாயி. இவரது மனைவி காயத்ரி(26). இவர்களது சிவான்யா என்ற 2 வயது பெண் குழந்தைக்கு கடந்த மாதம் 28-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது.

உடனே காடுவெட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வீட்டுக்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் மீண்டும் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் காட்டுப்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 31-ந்தேதி நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

அங்கு குழந்தை சிவான்யாவிற்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து பரிசோதனைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தனி வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5-ந் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை குழந்தை சிவான்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். பன்றிக்காய்ச்சலுக்கு பெண் குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்