2-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை சின்னமுட்டம் துறைமுகம் வெறிச்சோடியது

புயல் எச்சரிக்கையால் சின்னமுட்டம் மீனவர்கள் நேற்று 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் துறைமுகம் வெறிச்சோடியது.

Update: 2018-11-08 22:45 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 500-க்கும் மேற்பட்ட கட்டுமரம், வள்ளங்களிலும் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் காலையில், கடலுக்கு சென்று விட்டு இரவு கரை திரும்புவார்கள்.

இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்தது. மேலும், குமரி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் கடலில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் பெரும்பாலான மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு செல்லவில்லை.

இந்தநிலையில், நேற்று 2-வது நாளாக சின்னமுட்டத்தில் இருந்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், அவர்களது படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக மார்க்கெட் வெறிச்சேடியது.

இதுபோல், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 2-வது நாளாக பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. 

மேலும் செய்திகள்