போடியில்: ஸ்டூடியோ கடைக்காரர் குத்திக்கொலை

போடியில் ஸ்டூடியோ கடைக்காரர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

Update: 2018-11-08 21:45 GMT
போடி,

போடி திருமலாபுரத்தை சேர்ந்தவர் செல்வபாண்டியன் (வயது 45). இவர் திருமலாபுரம் மாரியம்மன் கோவில் பின்புறம் ஸ்டூடியோ கடை நடத்தி வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திக், செல்வபாண்டியன் கடைக்கு சென்று தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை செல்வபாண்டியன் ஸ்டூடியோவில் இருந்துள்ளார். அப்போது யாரோ மர்மநபர்கள் செல்வபாண்டியனை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து செல்வபாண்டியனின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஸ்டூடியோவிற்குள் சென்று பார்த்தனர். அப்போது கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் செல்வபாண்டியன் உயிருக்கு போராடினார்.

இதையடுத்து அவர்கள் செல்வபாண்டியனை மீட்டு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து போடி நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். செல்வபாண்டியனை கொலை செய்தது யார்? என்பது பற்றி தெரியவில்லை. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்