குடியாத்தத்தில் நாட்டு மருந்து சாப்பிட்ட 9 மாத குழந்தை திடீர் சாவு

குடியாத்தத்தில் நாட்டு மருந்து சாப்பிட்ட 9 மாத குழந்தை திடீரென பரிதாபமாக இறந்தது.

Update: 2018-11-08 22:45 GMT
குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா ஆலங்காயத்தை அடுத்த கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி (வயது 27). இவரது மனைவி இளவரசி. இவர்களின் 9 மாத ஆண் குழந்தை பிரித்திவிராஜ்.

சக்தி பெங்களூருவில் வெல்டிங் வேலை செய்து அங்கேயே குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 2 மாதங்களாக இளவரசி குழந்தையுடன் நாட்டறம்பள்ளி அருகே உள்ள தாய் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக குழந்தை பிரித்திவிராஜிக்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு அதிகமாக இருக்கவே அவர்களின் உறவினர் ஒருவர் குடியாத்தம் டவுன் தாழையாத்தம் பகுதியில் நாட்டு வைத்தியம் பார்த்து தோஷத்திற்கு கயிறு கட்டினால் உடல்நிலை சரியாகும் என கூறியுள்ளார்.

இதனையடுத்து சக்தி தனது மனைவி, குழந்தை மற்றும் உறவினருடன் நேற்று காலையில் குடியாத்தம் தாழையாத்தம் பகுதியில் உள்ள ஒரு நாட்டு வைத்தியரிடம் சென்று குழந்தைக்கு மருந்து வாங்கி கொடுத்துள்ளனர்.

சிறிது நேரத்தில் குழந்தை மயங்கி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக குழந்தையை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பெற்றோர்கள் குழந்தையின் உடலை கொட்டாவூருக்கு கொண்டு செல்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:-

குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் அரசு மருத்துவமனை மற்றும் தகுதி வாய்ந்த டாக்டர்களிடம் சிகிச்சைக்கு கொண்டு செல்ல வேண்டும். டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகளையே பயன்படுத்த வேண்டும். தாங்களாகவே குழந்தைக்கு மருந்து வாங்கி கொடுக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்