கடல் சீற்றத்தால் கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

கடலூரில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2018-11-08 21:45 GMT
கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுகத்தில் இருந்து சிங்காரத்தோப்பு, அக்கரைக்கோரி, ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, சொத்திக்குப்பம், தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசை படகுகளில் தினமும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

கடந்த 1-ந் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்ய தொடங்கியது. கடலும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் விசை படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் பெரும்பாலானோர் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை துறைமுகத்திலும், கடற்கரையோரத்திலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.

மீன்கள் வரத்து இல்லாததால் துறைமுக பகுதி ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடலூர் தாழங்குடா கடற்கரையில் இருந்து பைபர் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களும் தங்கள் படகுகளை கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். ஒருசில மீனவர்கள் மட்டும் ஐ.பி. என்ற படகில் சென்று மீன்பிடித்தனர். கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் அவர்களது வலையில் குறைந்த அளவிலேயே மீன்கள் சிக்கின.

மேலும் செய்திகள்