திருவெண்ணெய்நல்லூர் அருகே: விவசாயி மர்ம சாவு - போலீசார் விசாரணை

திருவெண்ணெய்நல்லூர் அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-11-09 22:00 GMT
அரசூர், 


திருக்கோவிலூர் தாலுகா துளுக்கம்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகர் (வயது 47), விவசாயி. இவருக்கு சொந்தமாக அதே கிராமத்தில் கரும்பு தோட்டம் உள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று காலை குணசேகர், தோட்டத்திற்கு சென்று தண்ணீர் பாய்ச்சிவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் இரவில் குணசேகரை தேடி அவரது குடும்பத்தினர், கரும்பு தோட்டத்திற்கு சென்றனர். அங்கு குணசேகர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது வாயில் ரத்தக்காயம் இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே இதுபற்றி திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குணசேகரின் மகன் சதீஷ், திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகர் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்