ஜேடர்பாளையம் அருகே ரேஷன்கடை விற்பனையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

ஜேடர்பாளையம் அருகே ரேஷன்கடை விற்பனையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-11-09 22:00 GMT
பரமத்திவேலூர், 
நாமக்கல் மாவட்டம், பரமத்தி தாலுகா பிலிக்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 49). இவர் அருகே உள்ள நெட்டையம்பாளையம் கிராமத்தில் ரேஷன்கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி விஜயா(40). இவர்களுக்கு சரவணன்(20) என்ற மகன் உள்ளார்.

சமீபகாலமாக கடன் பிரச்சினையாலும், உடல்நலக்குறைவாலும் சுப்பிரமணி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே வீட்டுக்கு வந்த அவருடைய மனைவி விஜயா, கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் ஜேடர்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அங்கு வந்த போலீசார், சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்