பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கருப்பு தினமாக அனுசரித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் தக்கலையில் நடந்தது

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கருப்பு தினமாக அனுசரித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-11-09 22:45 GMT
தக்கலை, 
மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த தினத்தை காங்கிரஸ் கட்சி கருப்பு தினமாக அறிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் அவதி படுவதாகவும், இதற்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று காலையில் தக்கலை தபால் நிலையம் முன்பு ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர். தொடர்ந்து, மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர தலைவர் அனு முன்னிலை வகித்தார். வட்டார தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், மாவட்ட துணை செயலாளர் ஜாண் இக்னேசியஸ், ஜெகன் ராஜ், நகர தலைவர் அருள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சட்டையில் கருப்பு பட்டை அணிந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதில், பொதுக்குழு உறுப்பினர்கள் ரத்தினகுமார், டாக்டர் தம்பி விஜயகுமார், மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவி சர்மிளா ஏஞ்சல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்