சேடபட்டி அருகே சரக்கு வேன்– லாரி மோதல்; வியாபாரி பலி

சேடபட்டி அருகே நின்றிருந்த சரக்கு வேன் மீது லாரி மோதியதில் காய்கறி வியாபாரி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-11-09 22:43 GMT

உசிலம்பட்டி,

சேடபட்டி அருகே சாப்டூர் 4–வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்(46). காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(45), தொட்டணம்பட்டி முனியாண்டி(45), எஸ்.கோட்டைப்பட்டி பழனி(55) ஆகியோர் மதுரை மற்றும் பரவையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளுக்கு வேனில் சென்று காய்கறிகளை மொத்தமாக வாங்கி வந்து, அவரவர் ஊர்களில் சில்லரை வியாபாரம் செய்வார்கள். இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பரவைக்கு சரக்கு வேனில் சென்று காய்கறிகளை வாங்கி கொண்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை சாப்டூரை சேர்ந்த ராஜ்குமார்(25) என்பவர் ஓட்டிச் சென்றார்.

அவர்கள் சென்ற வேன் சேடபட்டி அடுத்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் பஞ்சராகி நின்றுவிட்டது. இதனைத்தொடர்ந்து வேனை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு வேனில் வந்தவர்கள் அனைவரும் வேன் அருகில் நின்று கொண்டிருந்தனர். அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து ராஜபாளையம் நோக்கி பருத்தி பஞ்சு ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக, சாலையோரம் நின்றிருந்த சரக்கு வேன் மீது மோதியது. அப்போது லாரி அருகில் நின்றிருந்த ஆனந்தன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

மேலும் அவருடன் வந்த ராதாகிருஷ்ணன், முனியாண்டி, பழனி ஆகிய 3 பேரும் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டிச் சென்ற திருச்சியை சேர்ந்த டிரைவர் மகாமுனி என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்