3 பேர் கும்பலால் இளம்பெண் கற்பழிப்பு வழக்கு 3 போலீஸ் நிலையங்களுக்கு மாற்றம்

தார்டுதேவில் 3 பேர் கும்பலால் இளம்பெண் கற்பழிக்கப்பட்டார். இந்த வழக்கு 3 போலீஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டது.

Update: 2018-11-09 23:40 GMT
மும்பை, 

தார்டுதேவில் 3 பேர் கும்பலால் இளம்பெண் கற்பழிக்கப்பட்டார். இந்த வழக்கு 3 போலீஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டது.

இளம்பெண்

பால்கர் மாவட்டம் வசாய் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணுக்கு சம்பவத்தன்று தனது சகோதரியுடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்து கொண்ட அவர் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். பின்னர் அன்று இரவு இளம்பெண், தனது குடும்பத்துடன் 5 வருடமாக வசித்து வந்த மும்பை பாந்திரா கிழக்கு பகுதிக்கு வந்துள்ளார்.

அப்போது அவர், தன்னுடன் படித்த பள்ளிக்கூட நண்பர் ராகுல் மிஸ்ரா என்பவரை சந்தித்தார். இதில் ராகுல் மிஸ்ரா தங்க இடம் கொடுப்பதாக கூறி இளம்பெண்ணை தார்டுதேவ் பகுதிக்கு அழைத்து சென்று இருக்கிறார்.

3 பேரால் கற்பழிப்பு

அங்கு வைத்து ராகுல் மிஸ்ரா, தனது நண்பர்களான சூரஜ், ராகேஷ் ஆகியோருடன் சேர்ந்து இளம்பெண்ணை கற்பழித்து உள்ளார். இதையடுத்து மறுநாள் வீடு திரும்பிய இளம்பெண் வயிற்று வலியால் துடித்தார். இதுகுறித்து பெற்றோர் விசாரித்ததில், நடந்த சம்பவத்தை இளம்பெண் கூறினார். இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து இளம்பெண்ணின் தந்தை சம்பவம் குறித்து துலிஞ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கை பாந்திரா நிர்மல் நகர் போலீசுக்கு மாற்றினர். அவர்கள் நடத்திய விசாரணையில், இளம்பெண் தார்டுதேவ் பகுதியில் கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் வழக்கை தார்டுதேவ் போலீசுக்கு மாற்றினர். போலீசார் சம்பவம் தொடர்பாக வாலிபர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்