ஆலங்குளம் அருகே பயங்கரம்: துப்புரவு பெண் தொழிலாளி அடித்துக்கொலை கழிவுநீர் தொட்டியில் உடலை வீசிய கணவருக்கு வலைவீச்சு

ஆலங்குளம் அருகே துப்புரவு பெண் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவரது உடலை கழிவுநீர் தொட்டியில் வீசிச் சென்ற கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2018-11-10 21:30 GMT
ஆலங்குளம், 

ஆலங்குளம் அருகே துப்புரவு பெண் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவரது உடலை கழிவுநீர் தொட்டியில் வீசிச் சென்ற கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

துப்புரவு பெண் தொழிலாளி

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தாலுகா ஊத்துமலை அருகே உள்ள கம்மாவூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சுந்தரி (34). இவர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆகிறது. 5 வயதில் வளதி செல்வம் என்ற ஆண் குழந்தை உள்ளது.

ஏற்கனவே சுந்தரிக்கு திருமணம் முடிந்து, முதல் கணவரை விட்டு பிரிந்து விட்டார். அதன்பின்னர் ஆறுமுகத்தை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

நடத்தையில் சந்தேகம்

சுந்தரியின் நடத்தையில் ஆறுமுகம் சந்தேகம் அடைந்தார். தினமும் சுந்தரி வேலை நிமித்தமாக நெல்லைக்கு செல்வதால் முதல் கணவருடன் பழக்கம் இருக்குமோ? என சந்தேகப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகம் சுந்தரியை அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் சுந்தரி கோபித்துக் கொண்டு நெல்லை தாழையூத்து அருகே ராஜவல்லிபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் ஆறுமுகத்தின் உறவினர்கள் சுந்தரியை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

கழிவுநீர் தொட்டியில் பிணம்

நேற்று காலை சுந்தரியின் தம்பி வளதிக்கு ஆறுமுகம் போன் செய்து, “உன் அக்காளை அடித்துக் கொன்று கழிவுநீர் தொட்டியில் போட்டு மூடி வைத்துள்ளேன்“ என கூறி தொடர்பை துண்டித்து விட்டார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வளதி, இதுபற்றி உடனடியாக ஊத்துமலை போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தனலட்சுமி (ஊத்துமலை), அய்யப்பன் (ஆலங்குளம்) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் தொட்டியை திறந்து பார்த்தனர். அதில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த சுந்தரியின் உடலை மீட்டனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் சுந்தரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

அடித்துக்கொலை

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஆறுமுகம் தனது மனைவி சுந்தரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது கை, கால்களை கட்டி அடித்துக்கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டின் அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் உடலை வீசிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய ஆறுமுகத்தை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் வீட்டில் குழந்தையை காணாததால், ஆறுமுகம் தனது குழந்தையையும் உடன் அழைத்துச் சென்றாரா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியை கணவரே கொலை செய்து உடலை கழிவுநீர் தொட்டியில் வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்