தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி தூத்துக்குடியில் பரபரப்பு

தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர் மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-11-10 21:30 GMT
தூத்துக்குடி, 

தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர் மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

கல்லூரி மாணவர்

தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ஸ்ரீநாத் (வயது 19). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக பல்கலைக்கழக தேர்வுகளை தமிழில் எழுத அனுமதிக்க கோரி மாணவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தேர்வுகளை தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று ஸ்ரீநாத், தனது வீட்டில் இருந்த 10-க்கும் மேற்பட்ட காய்ச்சல் மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்