பட்டாசு வெடித்தபோது விபரீதம் மோட்டார் சைக்கிள்- மொபட் எரிந்து சேதம்
உடன்குடியில் பட்டாசு வெடித்த போது மோட்டார் சைக்கிள், மொபட் எரிந்து சேதம் அடைந்தது.
உடன்குடி,
உடன்குடியில் பட்டாசு வெடித்த போது மோட்டார் சைக்கிள், மொபட் எரிந்து சேதம் அடைந்தது.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
பட்டாசு வெடித்தனர்
உடன்குடி வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் (வயது 54). இவர் படுக்கப்பத்து மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் வளாகத்தில் பிளாஸ்டிக் தகடாலான மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு மொபட் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
சம்பவத்தன்று இரவில் அப்பகுதியில் சிலர் பட்டாசு வெடித்தனர். அப்போது பட்டாசின் தீப்பொறி பறந்து சென்று, கருணாகரன் வீட்டின் வளாகத்தில் உள்ள பிளாஸ்டிக் தகடாலான மேற்கூரையில் விழுந்து தீப்பிடித்தது.
எரிந்து சேதம்
சிறிதுநேரத்தில் மேற்கூரை முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதில் அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவை தீயில் எரிந்து சேதமாகின.
உடனே கருணாகரன் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.