பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி கலெக்டர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி கலெக்டர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2018-11-10 23:00 GMT
ஆத்தூர்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் ஊராட்சி காந்திபுரம் பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆத்தூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் மூலம் புகார் மனு செய்தார். அதில் ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு பட்டா மாறுதல் தொடர்பாக நான் சென்றேன். அப்போது அங்கு இருந்த உதவி கலெக்டர் செல்வன் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். பலமுறை இது போல என்னை தவறான எண்ணத்துடன் அணுகினார்.

இதற்கு அவரது டிரைவர் சவுந்திரராஜன், மற்றும் உதவியாளர் கலியபெருமாள் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்து இருந்தார். புகாரை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சிவக்குமார் இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஆத்தூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் மற்றும் போலீசார் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி கலெக்டர் செல்வன், டிரைவர் சவுந்திரம் என்ற சவுந்திரராஜன், உதவியாளர் கலியபெருமாள் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்