திருநன்றியூர் அருகே விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற ஆட்டோ டிரைவர் பலி அரசு பஸ் மோதியது

திருநன்றியூர் அருகே அரசு பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆட்டோ டிரைவர் பலியானார்.

Update: 2018-11-10 22:15 GMT
சீர்காழி,

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் கதிராமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (வயது 25), ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராமன் (19). இருவரும் நேற்று முன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து கதிராமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை மணிகண்டன் ஓட்டியதாக தெரிகிறது. திருநன்றியூர் அருகே சென்றபோது மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி நோக்கி வந்த அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், படுகாயம் அடைந்த ராமன் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்