கல்லூரி விடுதி அறையில் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்தார்

பெற்றோர் கண்டித்ததால் தஞ்சை அருகே கல்லூரி விடுதி அறையில் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-11-10 22:15 GMT
தஞ்சாவூர்,

திருவாரூர் மாவட்டம் அரசவளங்காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். லாரி உரிமையாளர். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 23). இவர் வல்லம் அருகே மின் நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தங்கி, அந்தப்பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., விவசாயம் 2-ம் ஆண்டு படித்துவந்தார்.

கடந்த 6-ம் தேதி தீபாவளி விடுமுறைக்காக மணி கண்டன் பெற்றோரை பார்க்க திருவாரூர் சென்றிருந்தார். அப்போது அவர் தந்தையின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 ஆயிரத்தை எடுத்து செலவு செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தன்னுடைய வங்கி கணக்கை சரிபார்த்த கனகராஜ் அதில் ரூ.15 ஆயிரம் எடுக்கப்பட்டது குறித்து மணிகண்டனிடம் கேட்டு அவரை திட்டியதாக தெரிகிறது. இதனால் மணிகண்டன் மனவருத்தத்தில் இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் விடுதிக்கு வந்த அவர், அங்கு தங்கியிருக்கும் தன்னுடைய நண்பர் களான பிரேம்குமார், விமல் ஆகியோருக்கு தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக செல்போன் மூலமாக குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

இந்த தகவலை கண்டு பதற்றம் அடைந்த அவர்கள் உடனே விடுதிக்கு வந்தனர். அப்போது மணிகண்டன் விடுதி அறைக்குள் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அவரை தட்டி எழுப்பி விசாரித்தனர். அப்போது அவர் தன்னுடைய தந்தையின் வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம் எடுத்து தீபாவளி பண்டிகை அன்று நண்பர்களுக்காக செலவு செய்துவிட்டதாகவும். இதை தெரிந்துகொண்ட என்னுடைய தந்தை திட்டியதால், மனவருத்தத்தில் சாப்பிடாமல் இருந்து மயங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர்கள், நாங்கள் சாப்பாடு வாங்கி வருவதற்குள் எந்த தவறான முடிவும் எடுக்காதே என கூறிவிட்டு வெளியே சென்று விட்டனர். இந்தநிலையில் வெளியே உணவு வாங்கிவிட்டு விடுதிக்கு திரும்பிய நண்பர்கள், விடுதி அறைக்குள் மணிகண்டன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வல்லம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்