போதைப்பொருள் கலந்த மது கடத்தியவர் கைது போலீசாரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு மற்றொருவர் ஓட்டம்

மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கலந்த மது பாட்டில்களை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரை கண்டதும் மது பாட்டில்களுடன் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-11-10 23:00 GMT
சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் மண்ணச்சநல்லூர்-சமயபுரம் செல்லும் சாலையில் வெங்கங்குடியில் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் போதைப் பொருள் கலந்த 10 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பிரதீபன் என்கிற சித்தார்த் (வயது 21) என்பவரை கைது செய்தனர்.

இந்நிலையில் போலீசார் சோதனையில் ஈடுபடுவதை கண்டதும் அவ்வழியே காரில் வந்த ஒருவர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். போலீசார், அந்த காரை சோதனை செய்தபோது அதிலும் போதைப் பொருள் கலந்த 30 மது பாட்டில்கள் இருந்து தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து காரை நிறுத்தி விட்டு தப்பி சென்றவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்