கரூர்-அரவக்குறிச்சியில் 987 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்

கரூர் மற்றும் அரவக்குறிச்சியில் நடந்த விழாக்களில் 987 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

Update: 2018-11-10 23:00 GMT
கரூர்,

கரூர் மற்றும் அரவக்குறிச்சியில் நேற்று பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, 987 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 95 லட்சத்து 89 ஆயிரத்து 375 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

முன்னதாக, அரவக்குறிச்சியில் நடந்த விழாவில் அரசுப்பணியிலிருக்கும்போது இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணிக்கான நியமன ஆணைகளை 3 பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி (கரூர்), லியாகத் (குளித்தலை), சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் மீனாட்சி, சுகாதாரப்பணிகளின் துணை இயக்குநர் நிர்மல்சன், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி தங்கவேல், வட்டாட்சியர்கள், கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், மாவட்ட அவைத்தலைர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், முன்னாள் செயலாளர் என்.எஸ்.கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கரூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

சர்கார் திரைப்படம் வருமானம் ஈட்டுவதற்காக எடுக்கப்பட்ட படம். அது குறித்து கருத்துக் கூற ஒன்றுமில்லை. அ.தி.மு.க. கொடுத்த விலையில்லா பொருட்களை எரித்தவர்கள் தி.மு.க. கொடுத்த தொலைக்காட்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டாமா?. தமிழக அரசு பஸ்களில் தீபாவளி பண்டிகையின்போது 6 லட்சம் பயணிகள் பயணிப்பார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட 1 லட்சம் பேர் கூடுதலாக மொத்தம் 7 லட்சம் பேர் வரை பயணித்து உள்ளார்கள். இதில் அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைத்தது என்பது குறித்து கணக்கீடு செய்த பிறகு தான் தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்