டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த கடலூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் - கலெக்டர் அன்புசெல்வன் நடவடிக்கை

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த கடலூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் அன்புசெல்வன் நடவடிக்கை மேற்கொண்டார்.

Update: 2018-11-10 23:15 GMT
கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், அதிகாரிகளுடன் நேற்று காலை கடலூரில் சிதம்பரம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு உள்ளதா? என பார்வையிட்டார். பின்னர் பணிமனை வளாகத்தில் உபயோகமற்ற பொருட் களை அப்புறப்படுத்தவும், நீர்த்தேக்க தொட்டியை சுத்தமாக பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் இப்பணிமனையில் ஆங்காங்கே உள்ள உபயோகமற்ற பொருட்களில் தண்ணீர் தேங்கி நின்று, டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்தது ஆய்வின்போது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார். அதற்கான ரசீது நகராட்சியின் மூலம் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கூத்தப்பாக்கம் ராமநாதன் நகரில் வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் ஏடிஸ் கொசுப்புழுக்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்தார். அப்போது தஸ்தகீர் என்பவர் வீட்டின் வெளியில் குப்பைகளை கொட்டியதற்காக உடனடியாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் அவரது வீட்டில் உள்ள குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கடலூர் சப்-கலெக்டர் சரயூ, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஆனந்தன், துணை இயக்குனர் (சுகாதாரம்) கீதா, மாவட்ட முதுநிலை பூச்சியியல் வல்லுனர் கஜபதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், கடலூர் வட்டாட்சியர் ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் என்.சக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்