குன்றத்தூரில் செல்போன் பறிப்பு; 2 பேர் கைது

குன்றத்தூரில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-11-11 22:15 GMT
பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் தனியாக நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இதையடுத்து குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான தனிப்படையினர் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர்கள் குன்றத்தூர், நந்தம்பாக்கத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 20), யோகலிங்கம் (24), என்பது தெரியவந்தது. இவர்கள் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களிடம் செல்போன்களை பறித்து சென்றது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், ஒரு மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்