பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தில் மூழ்கி வாலிபர் சாவு

சித்தன்குட்டை அருகே பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தில் மூழ்கி வாலிபர் இறந்தார்.

Update: 2018-11-11 22:30 GMT

பவானிசாகர்,

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் பிரவீன் (வயது 20). இவர் கோவையில் உள்ள கார் ஷோரூமில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

 இந்த நிலையில் பிரவீன் மற்றும் அவருடைய நண்பர்கள் 9 பேர் மோட்டார்சைக்கிளில் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியான சித்தன்குட்டை அருகே கல்ராமொக்கை என்ற இடத்துக்கு வந்தனர். அணையின் நீர்மட்ட உயரம் 100 அடியாக உள்ளதால் அதன் நீர்த்தேக்க பகுதி கடல்போல் காட்சி அளித்தது. இதை கண்டதும் பிரவீன் மற்றும் அவருடைய நண்பர்கள் 2 பேர் தண்ணீரில் இறங்கி குளித்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு பிரவீன் சென்றார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். அவரை அங்கிருந்த நண்பர்களால் காப்பாற்ற முடியவில்லை.

 இதுபற்றி அறிந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீனவர்கள் உதவியுடன் பிரவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்