குடும்ப தகராறில் தாயை கீழே தள்ளி கொன்றவர் மனைவியுடன் கைது

உசிலம்பட்டி அருகே குடும்பத் தகராறில் தாயை கீழே தள்ளி கொன்ற சம்பவத்தில் மகன், மருமகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2018-11-11 22:45 GMT

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே உள்ளது பண்ணைப்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 41). கூலித்தொழிலாளி. இவருடைய தாயார் அழகம்மாள்(90). பாண்டியின் மனைவி பேச்சியம்மாள் (30). அழகம்மாள் தனது மகனுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் மாமியார்–மருமகள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதேபோன்று நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது வெளியில் சென்றிருந்த பாண்டி வீட்டுக்குள் வந்த போது, தாயும், மனைவியும் சண்டையிட்டு கொண்டிருந்ததை பார்த்து கண்டித்தார். மேலும் தாயை பார்த்து மனைவியுடன் சண்டை போட்டதை தட்டிக்கேட்டார். அதில் அழகம்மாளுக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாண்டி தனது தாயை பிடித்து கீழே தள்ளினார்.

அதில் அழகம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இதைப்பார்த்த அழகம்மாளின் மகள் குட்டிராணி, தனது சகோதரர் பாண்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து குட்டிராணி உசிலம்பட்டி நகர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பாண்டியையும், அவருடைய மனைவி பேச்சியம்மாளையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்