காணாமல் போனவர் பிணமாக மீட்பு கொலையா? போலீசார் விசாரணை

காணாமல் போனவர் பிணமாக மீட்பு கொலையா? போலீசார் விசாரணை

Update: 2018-11-11 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அருகே உள்ள பள்ளத்தில் தேங்கி இருந்த கழிவுநீரில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் முள்ளூர் கும்புப்பட்டியை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 50) என்பதும், இவரை கடந்த 6-ந் தேதி முதல் காணவில்லை என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கழிவுநீரில் தவறி விழுந்து இறந்தாரா? என்பது உள்பட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்