புயல் எச்சரிக்கை எதிரொலி: குளச்சல், சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

புயல் எச்சரிக்கை எதிரொலியால் குளச்சல், சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Update: 2018-11-12 23:00 GMT
குளச்சல்,

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரம், வள்ளங்களிலும் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். கட்டுமர மீனவர்கள் தினமும் அதிகாலையில் கடலுக்கு சென்று விட்டு மதியம் கரை திரும்புவார்கள். ஆனால், விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடிப்பார்கள். இவர்களின் வலையில் பல உயர் ரக மீன்கள் சிக்கியிருக்கும்.

இந்தநிலையில் தற்போது வங்க கடல் பகுதியில் ‘கஜா’ புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், அனைத்து கடலோர மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது.

இந்தநிலையில், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அவர்களது விசைப்படகுகள் கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே கடலுக்குள் சென்றவர்கள் கரை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் அதிகாலையில் கடலுக்கு சென்று விட்டு இரவு கரை திரும்புவார்கள். தற்போது புயல் எச்சரிக்கை விடுத்துள்ளதால், சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் தங்களின் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து சென்றனர்.

மேலும் செய்திகள்