கோடநாடு எஸ்டேட் கொலை-கொள்ளை வழக்கு: கோர்ட்டில் ஆஜராகாத திபுவுக்கு பிடிவாரண்டு

கோடநாடு எஸ்டேட் கொலை- கொள்ளை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத திபுவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-11-12 21:45 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். இதில் மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மற்றும் சிலர் வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

சம்பவம் நடந்த இரண்டு தினங்களில் சேலத்தில் நடந்த ஒரு விபத்தில் டிரைவர் கனகராஜ் இறந்து விட்டார். இந்த வழக்கு தொடர்பாக சயன், வாளையார் மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு திபு ஆஜராகவில்லை. திபு வேறொரு வழக்கில் கண்ணணூர் சிறையில் இருந்து வருகிறார். மேலும் ஜித்தின்ராய், பிஜின் ஆகிய 2 பேருக்கு உடல்நிலை சரியில்லை என்று வழக்கறிஞர் சிவக்குமார் நீதிபதி வடமலை முன்னிலையில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கில் தொடர்புடைய மற்ற 7 பேரும் கோர்ட்டில் ஆஜராகினர். நீதிமன்றத்தில் ஆஜராகாத திபுவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து, வருகிற டிசம்பர் மாதம் 10-ந் தேதி கண்டிப்பாக கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதி வடமலை உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்