பெரம்பலூர், அரியலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், அரியலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-11-12 22:45 GMT
அரியலூர்,

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று மாலை பெரம்பலூர் தாலுகா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சரியான கணினி, இணையதள வசதி, மின் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதேபோல் அரியலூர் தாலுகா அலுவலகம் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரியலூர் மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் வட்டார தலைவர் ராஜ்குமார் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லையென்றால் வருகிற 19-ந் தேதி ஒரு நாள் விடுப்பு எடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பும், ஆலத்தூர் தாலுகா அலுவலகம் முன்பும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்